மதவாதத்தின் சின்னமாக மோடி விளங்குவதால்தான் அவரை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் வாராணசியில் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறினார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (மார்ச் 31) அவர் கூறியது:
நாட்டில் வறுமை, ஊழல், மதவாதம் ஆகிய மூன்றும் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளன.
இதனை ஓழிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை அமையும்.
ஊழலின் சின்னமாக காங்கிரஸ் கட்சியினரும் மதவாதத்தின் சின்னமாக மோடியும் இருக்கின்றனர். வறுமை நாடு முழுவதும் உள்ளது. இவை மூன்றையும் போக்க ஆம் ஆத்மி கட்சி போராடி வருகிறது.
இவை மூன்றும் அமைந்த தொகுதியாக வாராணசி தொகுதி காணப்படுகிறது. அங்கு வறுமையும், ஊழலும் நிறைந்துள்ளன. தற்போது மதவாதமும் மோடி உருவில் அங்கு வந்துள்ளது. இவற்றை எதிர்க்கும் வகையில்தான் மதவாதத்தின் சின்னமாக உள்ள மோடியை எதிர்த்து அரவிந்த் கேஜரிவால் வாராணசியில் போட்டியிடுகிறார்.
இதேபோல், கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் இயலாத கட்சிகளாக உள்ளன. அந்த கட்சிகளால் எதையும் செய்ய முடியாது.
மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருந்த அந்தக் கட்சிகளால் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றார் அவர்

0 comments:
Post a Comment