Thursday, July 24, 2014

தெலங்கானா மாநிலத்தில், பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில், பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 
38 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று மேடக் மாவட்டத்தில், மாசாய்ப்பேட்டையில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்கைக் கடக்க முயன்றது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வழியில் வந்த ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பள்ளிப்பேருந்து தூக்கி வீசப்பட்டது. இந்தக் கோர விபத்தில், 12 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்த பள்ளி குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள கோம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 9 குழந்தைகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில், பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார். குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் ஜகதீஷ் ரெட்டி பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், அமைச்சர் ஹரிஷ்ராவ், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment