Tuesday, September 30, 2014

கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் மற்றும் அவதூறான பரப்புரைகளை நடத்தி வரும் பொது பல சேனா என்ற தீவிரவாத புத்த அமைப்பு கொழும்பு நகரில் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளது.

மியான்மரின் சர்ச்சைக்குரிய தீவிரவாத அமைப்பான 969 இன் ஸ்தாபக தலைவர் அஷின் விராத்து என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அஷின் விராத்து தமது உரையில்,’முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமக்கு வீசா அனுமதி அளித்தமைக்காக இலங்கை அதிபருக்கு நன்றி. தொடர்ந்து இலங்கையின் பொது பல சேனா அமைப்புடன் இணைந்து இயங்க உள்ளோம். முஸ்லிம் மத தீவிரவாதிகளிடமிருந்து புத்தர்கள் அச்சுறுத்தலை சந்திக்கொண்டிருக்கின்றார்கள். எனினும், புத்தர்கள் பொறுமை காப்பது பலகீனத்தின் அடையாளமாகும் என்றார்.

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்துவருவதாகவும் இலங்கை ஒரு புத்த நாடு என்பதை உறுதிப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் பொது பல சேனா அமைப்பின் தலைவர்கள் இம்மாநாட்டில் தெரிவித்தனர்.

மாநாட்டில்பேசிய பொது பல சேனாவின் தலைவர்களில் ஒருவரான திலந்த விதானகே, இலங்கையின் பெயரை சிங்கள அரசு என்று மாற்ற வேண்டும் என்றும் இலங்கையிலுள்ள இந்துக்களை சிங்கள இந்துக்கள் என்றும், கிறிஸ்தவர்களை சிங்கள கிறிஸ்தவர்கள் என்றும் முஸ்லிம்களை சிங்கள முஸ்லிம்கள் என்றும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையின் தேசியக் கொடியில் பல்லினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்களை மாற்றி தனிச் சிங்கள அடையாளத்தை மட்டுமே கொண்டுவர வேண்டும் என்றும் அதற்கான அரசியல் நடவடிக்கைளில் இறங்கப் போவதாகவும் தங்களின் திட்டங்களை பொது பல சேனா அமைப்பு இம்மாநாடு வெளியிட்டது.

மியான்மரின் புத்த தீவிரவாத தலைவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு ஏற்கனவே முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இலங்கை பொதுபல சேனாவின் மாநாட்டில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பாக பி.பி.சியிடம் பேட்டியளித்த இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கூறுகையில், ’தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகள் நடந்துவருகிறது. சிங்கள-புத்த ஆட்சியாளர்களினாலேயே வடக்கு கிழக்கில் இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.’ என்று தெரிவித்தார்.

கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஃபாதர் எம். சக்திவேல், இனத்துவேஷ கருத்துக்களையும் மதவாத பிரசாரங்களையும் முன்னெடுத்துவரும் பொது பல சேனா அமைப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து தமது வருத்தத்தை தெரிவித்தார். பொது பல சேனாவுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாகவும் அந்த அமைப்பின் கருத்துக்களை அரசாங்கத்தின் நிலைப்பாடாகவே கருத வேண்டியிருப்பதாகவும் ஃபாதர் சக்திவேல் கூறினார்.

0 comments:

Post a Comment