Thursday, December 18, 2014

 ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கஃபேவில் துப்பாக்கி ஏந்திய நபர் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டிய செய்தி வெளியானதுமே ஆஸ்திரேலியா பதறிப்போனது.

இந்த திடீர் தாக்குதலால் ஆஸ்திரேலியாவே திகைத்துப்போயிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வசித்த முஸ்லிம்கள் பயம் கலந்த சங்கடத்திற்கு ஆளானார்கள். தாக்குதலை நடத்திய தீவிரவாதி அடையாளம் காரணமாக மக்களின் சந்தேகமும் , கோபமும் தங்கள் மீது பாயலாம் எனும் எண்ணம் அவர்களை உள்ளுக்குள் உலுக்கியது. இப்படி தான் நடக்கும் என்றில்லை. ஆனால் இப்படி சில இடங்களில் நடந்திருக்கிறது. இங்கும் இப்படி நடந்தால் என்ன செய்வது ? என்ற அச்சம் பலருக்கு இருந்தது. ஆனால் நல்லவேளையாக அந்த பலர் ஆஸ்திரேலிய சிறுபான்மையினர் மட்டும் இல்லை. பொதுவாக ஆஸ்திரேலிய மக்கள் பலரும் இந்த எண்ணம் தான் கொண்டிருந்தனர். இந்த உணர்வு தான் ஹாஷ்டேக் வடிவில் வெளிப்பட்டது.

டிவிட்டரில் பொங்கிய மனிதநேய உணர்வு ஒரு பேஸ்புக் பதிவில் இருந்து ஆரமபமானது.
ரச்சேல் ஜேகப்ஸ் எனும் பெண்மணி அந்த பதிவை பகிர்ந்து கொண்டிருந்தார். ரயிலில் சென்று கொண்டிருந்த போது அவர் அருகே அமர்ந்திருந்த சக பயணி ஒருவர் அமைதியாக தனது பர்தாவை கழற்றி வைத்துக்கொள்வைதை பார்த்திருக்கிறார். அவருக்கு இருந்த தயக்கமும் அச்சமும் ரச்சேலுக்கு புரிந்தது. 
டிரைன் நின்றதும் ரச்சேல் அந்த பெண்ணிடம் ஓடிச்சென்று , பர்தாவை மீண்டும் அணிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு துணையாக வருகிறேன் என கூறியிருக்கிறார்.  இதைக்கேட்ட அந்த பெண் நெகிழ்ந்து போய் அழுத படி ரச்சேலை கட்டிப்பிடித்தபடி ஒரு நிமிடம் இருந்துவிட்டு தனியே நடந்து சென்றிருக்கிறார்
.

இந்த பதிவை படித்த டெஸ்ஸா கும் எனும் டிவிட்டர் பயனாளி மிகவும் பாதிக்கப்பட்டார். உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் ( @sirtessa)  அவர், “மார்டின் பிலேஸ் பக்கமாக பஸ்சில் நீங்கள் செல்வதாக இருந்தால், நீங்கள் மத ஆடையை அணிந்திருந்தால் , அதனால் பாதுகாப்பற்று உணர்ந்தால் நான் உங்களுடன் வருகிறேன் , சொல்லுங்கள் என குறும்பதிவிட்டிருந்தார். 

கவலைப்படாதீர்கள் நான் உங்களுடன் வருகிறேன்  எனச்சொல்லி முஸ்லிம்களுக்கு அவர் துணை நிற்க முயன்ற விதம் சக டிவிட்டர் பயனாளிகளின் ஆதரவையும் பெற்றது. பலர் அந்த குறும்பதிவை ரிடிவீட் செய்தனர்.  இதைப்பார்த்த ஊக்கம் பெற்ற டெஸ்ஸா, முஸ்லிம்கள் மனதில் எழக்கூடிய அச்சத்தை போக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு பக்கபலமாக நிற்க தயாராக இருப்பதை டிவிட்டர் மூலம் தெரிவிக்க ஏன் ஒரு ஹாஷ்டேகை உருவாக்க கூடாது என நினைத்து #illridewithyou ஹாஷ்டேகை உருவாக்கி பகிர்ந்து கொண்டார்.
உடனே நூற்றுக்கணக்கானோர் அதை ஏற்றுக்கொண்டு , பொது இடங்களில் தனியே செல்ல அஞ்சும் முஸ்லிமகளுடன் தாங்கள் துணைக்கு வர தயாராக இருப்பதை இந்த ஹாஷ்டேகுடன் டிவிட்டரில் தெரிவித்தனர். வெகு விரைவில் இப்படி ஆயிரக்கணக்கான குறும்பதிவுகள் குவிந்தன.

இரண்டு மணி நேரத்தில் இந்த ஹாஷ்டேக் 40,000 முறை பகிரப்பட்டது. அடுத்த 2 மணி நேரங்களில் 150,000 குறும்பதிவுகளை கடந்து டிவிட்டரில் ஒரு இயக்கமாக உருவானது.
நான் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில்லை, ஆனால் பிரிஸ்பனில் இன்று இரவு யாரேனும் தனியே செல்வதாக இருந்தால் சொல்லுங்கள் நான் உடன் வருகிறேன் என @CaptainSammii எனும் டிவிட்டர் பயனாளி ஒருவர் கூறியிருந்தார்.

@sharnatweets
என்பவர் , நீங்கள் பர்த அணிந்து மேற்கு அடிலெய்டு பகுதியில் செல்வதாக இருந்து தனியே பயணிக்க அஞ்சினால் நான் உங்களுடன் வருகிறேன் என கூறியிருந்தார். இந்த உணர்வை ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் வெளிப்படுத்தினர்.

இதன் விளைவாக #illridewithyou ஹாஷ்டேக் முன்னிலை பெற்று கவனத்தை ஈர்ததது. 
ஒரு டிவிட்டர் பயனாளி முஸ்லிம்கள் தன்னை அடையாளம் கண்டு கொண்டு உதவி கேட்பதற்காக தனது பை மீது இந்த ஹாஷ்டேகை ஒட்டி வைத்திருந்தார். 

டிவிட்டரில் இப்படி ஒருமித்த குரலில் அனைவரும் ஆஸ்திரேலிய முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் தீவிரவாதத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த செயலை மற்ற டிவிட்டர் பயனாளிகள் அங்கீகரித்து தங்கள் ஆதரவையும் தெரிவித்தனர்.

இப்போது 500 குறும்பதிவுகள் #illridewithyou ஹாஷ்டேகுடன் வெளியாகின்றன. ஆஸ்திரேலியா நீ உன்னை நினைத்து பெருமிதம் கொள்ள வைக்க தவறுவதில்லை என @Atozai என்பவர் நெகிழ்ச்சியுடன் குறும்பதிவிட்டிருந்தார்.

இந்த ஹாஷ்டேக் முன்னிலை பெறுவது அற்புதமானது , எல்லோருக்கும் தலைவணங்குகிறேன். முஸ்லிம் நண்பர்கள் கொண்ட நான் இதனால் ஆறுதல் கொள்கிறேன் என @FraserMGreen என்பவர் குறிப்பிட்டிருந்தார்.
@DennisCricket_
என்பவர் என் தாத்த அரசரையோ கொடியையோ காக்க போருக்கு செல்லவில்லை, தீவிரவாத அபத்திற்கு எதிராக #illridewithyou  என குரல் கொடுக்க கூடிய மக்களை காக்க சென்றார்என உணர்ச்சி பொங்க குறிப்பட்டிருந்தார்.

@MifrahMahroof
என்பவர் இந்த ஹாஷ்டேக் ஆஸ்திரேலியராக என்னை பெருமை கொள்ள வைக்கிறது என்று கூறியிருந்தார்.

@billshortenmp
என்பவர் ஆஸ்திரேலியர்கள் தாங்கள் மிக சிறப்பாக செய்யக்கூடியதை , துவேஷம் மற்றும் சகிப்புத்தன்மையின்மைக்கு எதிராக ஒன்று பட்டு நிற்பதை செய்து கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

தீவிரவாத தாக்குதல் மூலம் வெறுப்பையும் அச்சத்தையும் சமூகத்தில் விதைக்க நினைப்பவர்களுக்கு மானுடம் கொடுத்த பதிலடி இது.

0 comments:

Post a Comment