Friday, February 21, 2014

dhehlan
“ஏழு பேர் விடுதலைக்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!” என்று SDPI கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததோடு அவர்களது தண்டனையை விரும்பினால் மத்திய மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வழிகாட்டியது.
இதன் அடிப்படையில் தமிழக அரசு 7 பேரின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய ஆணையிட்டது. தமிழக அரசின் இந்த முடிவை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்றிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த எதிர்ப்பை எல்லோராலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, சுப்பிரமணிய சாமி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அவர்களின் தொடர் தமிழர் விரோத நடவடிக்கையை காட்டுகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் 7 பேரின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து தனது கட்சியின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தியின் எதிர்ப்புக்கு கண்டனத்தை தெரிவித்திருக்கும் திரு. வைகோவை போன்றவர்கள் தங்களின் கூட்டணி தலைவர்களின் எதிர்ப்பை வேடிக்கை பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை.
இரட்டை வேடம் போடும் பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது பத்திரிகைக் செய்தியில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment