Friday, March 28, 2014

பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் (29-ந் தேதி)தொடங்குகிறது.தமிழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் ஏப்ரல் 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல், நாளை (29-ந் தேதி) தொடங்குகிறது.இதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:-ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியின் (ஆர்.ஓ) அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஏப்ரல் 5-ந் தேதியாகும்.ஒவ்வொரு நாளும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை (30-ந் தேதி) விடுமுறை நாளாகும். அதுபோல் 31-ந் தேதி தெலுங்கு புத்தாண்டு தினமும் விடுமுறை தினமாகும். எனவே அந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்படாது.வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும்போது, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, கார்கள் புடைசூழவோ வரக்கூடாது. 100 மீட்டர் தூரத்துக்குள் வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும்.தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன், அவரை முன்மொழிபவர் உட்பட 4 பேர் மட்டுமே செல்லலாம். 5-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின் போது முறையே ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு இதில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தலைமை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment