மும்பை: இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் களால் போராளிகடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட 45 கேரளா நர்ஸ்கள், ஒரு தமிழக நர்ஸ் ஆகியோர் இன்று காலை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். அவர்களை இராக்கின் இர்பில் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. இந்த விமானம் இன்று காலை 9 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த நர்ஸ்களுடன் 137 பயணிகளும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த விமானம் அங்கிருந்து சிறிது நேரத்தில் கொச்சி செல்லும். அங்கு அனைத்து நர்ஸ்களும் தரையிறக்கப்படுவர்.
இவர்களை கேரள முதல்வர் உம்மன் சாண்டி விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளார். முன்னதாக இவர்கள் திக்ரிக் நகரில் மருத்துவமனையில் பணியில் இருந்தனர். இராக்கை ஆக்கிரமித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் இந்த நர்ஸ்களை பிணயக் கைதிகளாகப் பிடித்தனர். போராளிகள் மீது இராக் படையினர் தாக்குதல் நடத்தியதையடுத்து நர்ஸ்களை அவர்கள் மொசுல் நகருக்குக் கடத்திச் சென்றனர். இந் நிலையில் இந்திய அரசு பல்வேறு வளைகுடா நாட்டு தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தைகளை நடத்தி நர்ஸ்களை மீட்க முயற்சி மேற்கொண்டது. இந் நிலையில் திடீரென நர்ஸ்கள் அனைவரையும் போராளிகள் நேற்று விடுவித்தனர். இதையடுத்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இர்பில் நகருக்கு விரைந்தது. விடுவிக்கப்பட்ட நர்ஸ்கள் அனைவரையும் போராளிகள் மொசுல் நகரில் இருந்து இர்பிலுக்கு கொண்டு வந்தனர். இன்று காலை இந்த நர்ஸ்களையும் இராக்கில் சிக்கித் தவித்து வந்த மேலும் 137 இந்தியத் தொழிலாளர்களையும் ஏற்றிக் கொண்டு இந்த விமானம் இந்தியா கிளம்பியது. காலை 9 மணிக்கு இந்த விமானம் மும்பை விமானம் வந்தடைந்தது. இவர்களின் வருகைக்காக நர்ஸ்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கொச்சி விமான நிலையத்தில் ஆவலோடு காத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த மோனிஷா என்ற தமிழக நர்ஸும் அடங்குவார். நர்ஸ்களை கொச்சியில் இறக்கிய பின் இந்த விமானம் மற்ற பயணிகளை ஹைதராபாத்திலும் டெல்லியிலும் தரையிறக்கும்.




0 comments:
Post a Comment