Friday, August 15, 2014

சென்னையிலிருந்து மஸ்கட்டுக்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து செல்லும் விமானங்களை கடத்தவும், அவற்றை தாக்கவும் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, சென்னை, மும்பை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (14ஆம் தேதி) காலை மர்ம போன் ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி, இந்தியாவில் இருந்து மஸ்கட்டிற்கு செல்லும் ஏமன் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு இன்று (14ஆம் தேதி) காலை 7.30 மணிக்கு 149 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த ஏமன் விமானம் நிறுத்தப்பட்டது. அதில், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் 2 முறை சோதனை செய்தனர். தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரியவந்தது.

0 comments:

Post a Comment